பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று பகல் 1.04க்கு காலமானதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆக.5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்பிரமணியம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி கொரோனாவில் இருந்து மீண்டு, உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது
75 வயதாகும் எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என்று ஏறத்தாழ 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர். ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம் என்பது அவரது முழுப் பெயர். சினிமாவில் ‘பாலு’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் பாடிய பாடலான பாடும் நிலாவே இவருக்கு பாடும் நிலா பாலு என்று அடைமொழியுடன் அழைக்கப் பட காரணமாயிற்று.
மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல நல்ல மனிதராகவும் திகழ்ந்தவர் உதவிகள் புரிவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட எஸ் பி பாலசுப்ரமணியம் அன்மையில் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்தின் சார்பில் இயங்கும் வேத பாடசாலைக்கு அளித்தார்
covid 19 காலம் என்பதால் அனைவரும் வீட்டில் இருங்கள் வெளியில் செல்லாதீர்கள் என்ற அறிவுரையுடன் தினந்தோறும் தனது ரசிகர்களை இணையதளம் வாயிலாகவே பாடி மகிழ்வித்து வந்தார் ரசிகர் எழுப்பும் கேள்விகளுக்கு அவர்கள் விரும்பும் பாடலுக்கும் சரியான வகையில் பதில் அளித்து ஃபேஸ்புக் வாயிலாக லைவ் நிகழ்ச்சிகளை தினந்தோறும் செய்துவந்தார்
இடையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின இதை அடுத்து கடந்த ஆக.5 முதல் சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் எஸ்பிபி.
அவருக்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையுடன்சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
பின்னர் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி அவருக்கு கொரோனா நெகட்டிவ் என அறிக்கை வந்தது
எனினும் நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக் கூறப் பட்டது. இந் நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
அவரது மறைவு குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது எஸ்.பி.பி.யின் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.