இந்தோ – பசிபிக் பிராந்தியம், தென் சீனக் கடல் பகுதி உட்பட பல நாடுகளுடனான மோதல் போக்கை, சீனா கடைபிடித்து வருகிறது. குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளுமே, மிகப் பெரிய ஜனநாயக நாடுகள்: மிகவும் வலுவான பொருளாதார நாடுகள்.
இந்த நான்கு நாடுகளுக்கும், மற்றொரு முக்கியமான ஒற்றுமை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அச்சுறுத்தலை, நான்கு நாடுகளுமே தனித்தனியாக சந்தித்து வருகின்றன. சீனாவுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காமல், இத்தனை ஆண்டுகள் வீணடித்து விட்டதாக, நான்கு நாடுகளுமே தற்போது உணர்கின்றன.
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள், வேலைகளை, சீனா கொள்ளையடிக்க, அமெரிக்காவில் இதற்குமுன் இருந்த அரசுகள் அனுமதித்து விட்டன. இதுபோன்ற தவறை செய்துவிட்டதாக, குவாட் அமைப்பின் மற்ற நாடுகளும் உணர்கின்றன. தனிப்பட்ட முறையில், குவாட் அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும், சீனாவுடன் பிரச்சினை உள்ளது.
இந்திய எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை, சீனா குவித்து வைத்துள்ளது. சீனவீரர்களுக்கும்,இந்தியவீரர்களுக்கும் இடையே மோதலும் நடந்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவை, சீனா அச்சுறுத்தி வருகிறது. வெளியுறவு அமைச்சர், ராணுவ அமைச்சர், ராணுவ அதிகாரிகள் என இரு தரப்பிலும் பல சுற்றுபேச்சு நடத்தியும், இந்த பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
அதேபோல், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், சீனாவுடன் வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளது. இந்த நான்கு நாடுகளும் இணைந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சவால்களை முறியடிக்க, ஒருங்கிணைந்த வழிமுறைகளை உருவாக்குவது குறித்து தற்போது பேசியுள்ளன.
எல்லையில்அமைதியைஏற்படுத்துவதற்காக நம் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீனா, மற்றொரு பக்கம், எல்லையில் வீரர்களை குவித்து வருவது, அந்த நாட்டின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)