- சென்னை மாநகராட்சி நோட்டீஸூக்கு எதிராக தொடர்ந்த வழக்கு
- * வழக்கை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல்
- * ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்த வழக்கு தொடர்ந்தார் ரஜினி
- * ராகவேந்திரா மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
- * மண்டபம் காலியாக இருந்ததால் வரி குறைப்பு பெற தனக்கு உரிமை உள்ளது – ரஜினிகாந்த்
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான சொத்து வரி நோட்டீஸை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது.. இதை அடுத்து ரஜினி தனது மனுவை வாபஸ் பெற முடிவு செய்தார்.
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் தன்னுடைய ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை என்பதால் சொத்து வரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, நோட்டீஸ் அனுப்பப்பட்ட பத்து நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்தது ஏன் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். முதற்கட்டமாக மாநகராட்சியை அணுகாமல் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற நேரத்தை வீணடித்தது ஏன் என்றும் ரஜினி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்காக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, வழக்கையும் தள்ளுபடி செய்தார். ஆனால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ரஜினி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி கண்டனத்தை அடுத்து வரி செலுத்த விலக்கு கேட்ட வழக்கை திரும்பப் பெற ரஜினிகாந்த் முடிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.