நிவர் புயல் காரணமாக நிறுத்தப் பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கின.
நிவர் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில்
பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சேவையை தொடங்க அரசுப் பேருந்துகள் இயக்ககம் உத்தரவிட்டது. அதன்படி, பேருந்து சேவை நிறுத்தப்பட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இன்று நண்பகல் 12 மணி முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன.
முன்னதாக நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதுபோல், இன்று பிற்பகல் பெரும்பாலான ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கின. நேற்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் சேவை முழுதும் நிறுத்தப் பட்டது. மேலும் இன்றும் சில குறிப்பிட்ட சேவைகள் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், பெரும்பாலான ரயில்கள் இன்று இயங்குகின்றன
சென்னையில் விமான சேவை காலை 10 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில், சென்னை விமான நிலையம் செயல்பட தொடங்கியது.
காலை 6 மணி முதல் தில்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். காற்று வீசிக் கொண்டிருக்கும் நிலையில், விமான போக்குவரத்து 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதே போல், சென்னையில் இன்று பிற்பகலுக்குள் படிபடியாக மின் விநியோகம் தொடங்கும் என்றும், சென்னை தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைநீர் வடிய வடிய மின் சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்தார்.