ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்ததை அடுத்து, ரஜினி மக்கள் மன்ற கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் தமிழருவி மணியன். ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று கூறியதும் அரசியல் வாழ்க்கை விட்டு விலகுகிறேன். நான் போகிறேன் திரும்பி வரமாட்டேன் என கூறிய தமிழருவிமணியன், மீண்டும் காந்தி இயக்கத்தில் இணைந்து அதன் செயல்பாடுகளில் அக்கறை காட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் கட்சி தொடங்குவார் என தெரிவித்துள்ளார். இப்போதைக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்றுதான் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். எப்போதுமே கட்சி தொடங்க மாட்டேன் என ரஜினிகாந்த் சொல்லவில்லை. இதனால்தான் அவர் மக்கள் மன்றத்தை கலைக்கவில்லை என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர் பல்வேறு கட்சிகளில் இணைந்து வரும் நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னை தொடர்பு கொள்கின்றனர் என்றும் இதனால் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன் என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அருகில் அவர் கூறியதாவது,
காந்திய மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி என்னுடன் தொடர்பு கொள்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்புநலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை, அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய இரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிந்திருக்கிறேன்.
பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை என தெரிவித்துள்ளார்.