4 மணிநேரம் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடிய சிறுவன், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ங.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் பகுதியை சார்ந்தவர் பச்சையப்பன். இவரது இரண்டாவது மகன் தர்ஷன் (வயது 16). இவர் தனியார் பள்ளியில் பயின்று வரும் நிலையில், பயர்வால் என்ற இணைய விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளார்.
தினமும் எந்த நேரத்திலும் பயர்வால் விளையாட்டை விளையாடிக்கொண்டு இருப்பதை வழக்கமாக வைத்துள்ள தர்ஷன், இன்று காதில் ஹெட்செட் போட்டு அதிகளவு சத்தத்துடன் கத்தியவாறே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென மயங்கி விழவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவே, தர்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சிறுவனின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிறுவனுக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.