அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கிராமத்திற்கு வருகை தந்த கும்பலொன்று, பார்ப்பதற்கு பெரிய நிறுவனத்தில் இருந்து வந்திருப்பது போல பாவனை செய்துள்ளது. இதனையடுத்து ஊரில் உள்ள ஏழை மக்களை அழைத்து, தங்களோடு வந்தால் சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், தங்கவும் இடமளித்து நல்ல ஊதியம் வழங்குவதாக கவர்ந்திழுக்கும் வகையில் பேசிய நிலையில், இந்த கும்பலின் பேச்சில் அக்கிராம பெண்கள் விழுந்துள்ளனர். இதனையடுத்து இவர்களுடன் 4 சிறுமிகள் மற்றும் 7 பெண்கள் என 11 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.
சில திருமணம் முடிந்த பெண்கள், தங்களது கணவரின் பேச்சையும் மீறி சம்பளத்திற்க்காக சென்ற நிலையில், இதனைப்போன்று அக்கும்பல் அசாமில் உள்ள பல கிராமங்களுக்கு சென்று பெண்களை அழைத்து வந்துள்ளது.
இந்த விவகாரத்தால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இக்கும்பல் பெண்களுடன் தங்கியிருந்த இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில் 11 பெண்கள் மீட்கப்பட்ட நிலையில், கும்பலை சார்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வேலை மற்றும் நல்ல சம்பளம் என ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் இந்தியாவின் பல மாநிலத்திற்கு கடத்த திட்டமிடப்பட்டு இருந்தது அம்பலமானது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.