ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். முதல் மனைவி பிரிந்து சென்றதால் கெளவுசல்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, கணவனை இழந்த கௌசல்யாவின் சகோதரி சுந்தரியும், முருகேசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இதனால், சுந்தரி மற்றும் அவரது 13 வயது மகள் என அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த தீபாவளி அன்று சிறுமியின் தாய் மற்றும் சித்தி வெளியே சென்றுவிட்டதால், வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற முருகேசன் சிறுமி தனியாக இருப்பதைக் கண்டு, அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழந்தையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததார்
அத்துடன், இதனை வெளியில் சொன்னால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். அதனால் அச்சமடைந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். சிறுமியின் பயத்தை பயன்படுத்திக் கொண்ட முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.
இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சோற்வுற்று காணப்பட்டதால், சந்தேகமடைந்த தாய் சுந்தரி சிறுமியிடம் விசாரித்திருக்கிறார். அப்போதும் சிறுமி பயந்துகொண்டு தனக்கு நடந்த அநீதியை தாயிடம் சொல்லாமல் மழுப்பியிருக்கிறார்.
ஆனால் சிறுமியின் தாய் தொடர்ந்து கேட்டதால் அவர் தனக்கு நடந்த கொடுமையை அழுதுக்கொண்டே கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன சுந்தரி, என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தப்பிச் செல்ல முடிவெடுத்து, குழந்தையுடன் பெருந்துறை பேருந்து நிலையத்திற்கு சென்றார்.
வீட்டில் இருவரும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த முருகேசன், அவர்களை தேடி பெருந்துறை பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுந்தரியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த முருகேசன், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால், அச்சமடைந்த சுந்தரி, பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். முருகேசனை கைது செய்த காவல்துறையினர், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.