கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (40). இவருடைய மனைவி சபிதா (38). அங்குள்ள மதரசாவில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் அவர் 4 மாத கர்ப்பிணி ஆவார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகன் ஆமிலின் (6). 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் பாலக்காடு தெற்கு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட சபிதா, தனது 3-வது மகனை கொலை செய்துவிட்டதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சபிதா வீட்டிற்கு சென்றனர்.
அங்கு சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தான். உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
அத்துடன் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சபிதாவை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் அவரே தனது மகனை நரபலி கொடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சபிதா கடந்த சில நாட்களாக சோர்வான நிலையில் இருந்துள்ளார். அவருக்கு தோஷம் இருப்பதாகவும், அதற்கு 3-வது மகனை நரபலி கொடுத்தால் அந்த தோஷம் நீங்குவதுடன், மகனும் உயிரோடு வந்து விடுவதாக கனவு வந்ததாக கூறுகிறார்.
எனவே அவர் தனது 3-வது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்று கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்கின்றனர்.