ஸ்டாலின் தான் வராரு; விடியல் தரப்போறாரு’ என்ற வாசகத்துடன், கடைகளில், தி.மு.க.,வின் டிஜிட்டல் பேனர் வைக்கப்படுவதால், ‘ஸ்டாலின் கட்சி நடத்துறாரா; கடை நடத்துறாரா’ என, பலரும் கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, அரசியலில் எழுத்தும், பேச்சும் கைகொடுத்தது. அவரது மறைவிற்கு பின், தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டாலின் பேசுவது, எதிர்தரப்பினரின் கேலிக்கு ஆளாகி வருகிறது. சமூக வலைதளங்களில், அதிகம் கிண்டல் அடிக்கப்படுகிறது. இதை உணர்ந்துள்ள ஸ்டாலின், சமூக வலைதளங்கள் வாயிலாக, தன் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். இதற்கென தனி குழுவையும் நியமித்துள்ளார்.
ஸ்டாலின் பங்கேற்கும் பிரசார நிகழ்ச்சிகள், சமூக வலைதளங்களில் உடனுக்குடன் நேரலை செய்யப்படுகின்றன. அறிக்கைகளில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை, போஸ்டர் வடிவில் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது, ஸ்டாலினுக்கு ஓரளவு கைகொடுத்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த முயற்சியாக, கடைகளில் வைக்கப்படும், டிஜிட்டல் பேனர்கள் வடிவில், தன் பிரசாரத்தை ஸ்டாலின் துவங்கியுள்ளார்.
வழக்கமாக இதுபோன்ற டிஜிட்டல் பேனர்களை, மொபைல்போன், குளிர்பானம், சிகரெட் உள்ளிட்டவை தயாரிக்கும், கார்பரேட் கம்பெனிகள், தங்கள் பொருட்களின் விளம்பரத்திற்காக, கடைகளுக்கு இலவசமாக வழங்கும். இந்த டிஜிட்டல் பேனரில், விளம்பரத்திற்கு கீழ், கடையின் பெயரும் சிறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அதேபோல, தி.மு.க., தரப்பில் வழங்கப்படும் டிஜிட்டல் பேனரில், ஸ்டாலின் போட்டோவுடன், ‘ஸ்டாலின் தான் வராரு; விடியல் தரப்போறாரு’ என்ற வாசகம் அச்சிடப்பட்டு உள்ளது. இறுதியாக, அந்த கடையின் பெயரும் சிறியதாக இடம் பெற்றுள்ளது.
இது கடைகள், கட்சியின் அலுவலகங்கள் மட்டுமின்றி, நிர்வாகிகள், தொண்டர்களின் வீடுகளிலும், இரவு நேரங்களில் மின் ஒளியில் ஜொலிக்க துவங்கியுள்ளது.
கார்ப்பரேட் கம்பெனிகளின் பார்மலாவை சுட்டு, தன் பிரசாரத்திற்கு ஸ்டாலின் பயன்படுத்தி வருவதை, தி.மு.க.,வினர் ஆச்சரியமாக பார்க்க துவங்கியுள்ளனர். இதை பார்க்கும் எதிர்தரப்பினர், ‘ஸ்டாலின் கட்சி நடத்துகிறாரா; கடை நடத்துகிறாரா’ என, கிண்டல் அடித்து வருகின்றனர்