இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பட்டாபி சீதாராமன் தெருவில் வசித்து வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது வீட்டில் சம்பவத்தன்று அவரின் மனைவி சர்மிளா மட்டும் இருந்துள்ளார். வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில், வேட்டி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் போதையில் தள்ளாடி வந்துள்ளான்.
அங்கு, தனியாக இருந்த ஹரி கிருஷ்ணனின் மனைவியிடம் உடைந்த பாட்டிலை காட்டி, குத்தி விடுவதாக மிரட்டி தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து சர்மிளா திருடன்.. திருடன்.., என்று கூச்சலிட்டபடி ஓடவிடாமல் பிடித்துள்ளார்.
இதில், ஒரு சமயத்தில் இருவரும் கீழே விழுந்துவிடவே, கீழே விழுந்த கொள்ளையன் லாரிக்கு அடியில் மாட்டிய எலி போல அகப்பட்டுள்ளான். இதன்பின்னர், அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற நிலையில், அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி வழியாக வந்த மாதவன் என்பவர் திருடனை மடக்கிப் பிடித்த நிலையில், அவரது வேட்டியை அவிழ்த்து விட்டு தப்பி ஓடியுள்ளான்.
பின்னர் தலைதெறிக்க ஓடிய வேகத்தில், எதிரே இருந்த சுவற்றை பார்க்காமல் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளான். அக்கம் பக்கத்தினர் இதற்குள்ளாக சத்தம் கேட்டு சுதாரிக்கவே, அனைவரும் மொத்தமாக வந்து அடித்து நொறுக்கி, பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கொள்ளையனின் பரிதாப நிலையை பார்த்து அவசர உதவிக்கு தகவல் தெரிவித்த நிலையில், நையப்புடைத்ததில் வலி தாங்க இயலாமல் வளைந்து நெளிந்த அவசர ஊர்தியில் ஏறி படுத்துக்கொண்டான். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து விசாரணை செய்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில், அங்குள்ள கொழுந்துறை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் என்பதும், துபாயில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாக ஊர் திரும்பி தற்போது கட்டிட வேலைக்கு செல்வதும் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மது அருந்தியதால், திறந்து கிடந்த வீட்டிற்குள் சென்று சங்கிலி பறிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. மேலும், பெண்கள் தனியாக இருக்கும் பட்சத்தில், வீட்டின் வாயில் கதவுகளை பூட்டி வைக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.