தன்னை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு பணம் நகைகளை திருடி சென்ற பெண் மீது நடவடிக்கை எடுக்க கூறி இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகேயுள்ள மணக்குடியைச் சேர்ந்தவர் பாலகுரு (26). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 நவம்பர் மாதம் பேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பழகி வந்ததில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து ஊர் ஊராக சுற்றி திரிந்துள்ளனர்.
பின்னர் 2019-ஆம் ஆண்டு மே மாதம் தன் பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி மீராவை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னர் தான் தெரிய வந்துள்ளது அந்த பெண்ணின் பெயர் ராஜபுநிஷா, இவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள்என்பவை. இருப்பினும் காதல் மோகத்தில் பாலகுரு இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் பாலகுருவிடம் வீட்டின் அருகில் உள்ளவர்கள் நீ இல்லாத நேரத்தில் வேறு ஆண்கள் வருகின்றனர் என தெரிவிக்க இது குறித்து பாலகுரு ராஜபுநிஷாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை எழுந்துள்ளது. அதன்பின் அந்த பெண்ணின் செல்போனை எடுத்து பார்த்த போது தான் அவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சண்டையில் தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிய ராஜபுநிஷா மீண்டும் வரவில்லை. விசாரித்ததில் அந்த பெண் பாலகுருவை நான்காவதாக திருமணம் செய்து கொண்டதும், அவர் தற்போது திண்டுக்கல் பார்த்திபனுடன் வாழ்ந்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் பாலகுருவின் வீட்டில் இருந்த 1 பவுன் செயின் மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜபுநிஷாவின் தாய் மும்தாஜை தொடர்பு கொண்டு கேட்டபோது என் மகள் பணத்திற்காக பலபேரை திருமணம் செய்து கொள்வாள், நீ ஒதுங்கிக்கொள் என மிரட்டியுள்ளார். ராஜபுநிஷா பேஸ்புக் டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு அதற்கு கமெண்ட் செய்யும் ஆண்களை தேர்வு செய்து வலைவீசி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இது குறித்து பாலகுரு மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பாலகுரு புகார் மனு அளித்துள்ளார். மனுவில் தன்னை போல் வேறு இளைஞர்கள் யாரும் இவர் வலையில் சிக்கிவிடக்கூடாது எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.