மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்!
மதுரை : சென்னை பெரு நகரங்களில் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள், மாநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மதுரை மாநகர் பகுதிகளுக்கு முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மதுரை மாநகர் பகுதிகளில் இயக்கப்பட நேற்று அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, இன்று முதல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் வரையிலும், மேலும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லூர் வழியாக ஆரப்பாளையம் வரையிலும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வரையிலும் மற்றும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வரையிலும் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கும் குளிர்சாதனப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது
மக்களின் வரவேற்பை அடுத்து பின்னர் அடுத்தடுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏசி பஸ்களில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணமாக 15 முதல் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் வணிக மேலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகரப் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.