மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா – நாகர் ஹவேலி மக்களவை எம்பியாக இருந்தவர் மோகன் டெல்கர் (58). காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இவர் மக்கள் செல்வாக்கால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அவர், மும்பையின் மரைன் டிரைவில் உள்ள சீ கிரீன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் எம்பி மோகன் டெல்கர் அறையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மும்பை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் சஞ்சிபாய் டெல்கர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எப்படி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என்கின்றனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துக்கொண்ட அறையில் இருந்து போலீசார் அவர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். தற்கொலைகான காரணம் குறித்தும், அக்கடித்தில் உள்ள தகவல்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை போலீசார் கூற மறுத்துவிட்டனர். கடிதம் குஜராத்தி மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
58 வயதான மோகன் டெல்கர் ஏழு முறை எம்பியாகியுள்ளார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.