கந்தர்வகோட்டையில் முதியவர் தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் ஒரு லட்சத்தை அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை வழங்கினார். இதன் மூலம் தன் வாழ்நாள் ஆசை நிறைவேறியதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
கந்தர்வகோட்டை அக்கட்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் வன்னியர். 97 வயதான இவர் தீவிர ராம பக்தராகவும் அக்கட்சிப்பட்டியில் உள்ள ராமர் கோயிலுக்கு தொண்டூழியம் பணியில் வாழ்நாளை அர்ப்பணித்தவராவும் உள்ளார்.
தான் சிறுக சிறுக சேமித்த ரூபாய் ஒரு லட்சத்தை அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக நன்கொடை வசூலித்து வரும் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களான ஆ.விஜயராம், ஹரி. கங்காதரன் ஆகியோரிடம் இன்று வழங்கினார்.
இது குறித்து முதியவர் ராதாகிருஷ்ணன் வன்னியர் கூறியதாவது, நான் சுவாமி ராமர் மீது அளவுகடந்த பக்தியும் அன்பும் கொண்டவனாக இருந்து வருகிறேன்.
ராமர் கோயில் கரை சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்,
இந்நிலையில் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமருக்கு கோயில் கட்டப்படுவது குறித்து அறிந்து நான் சேமித்து வைத்திருந்த பணத்தினை கொடுத்து என் வாழ்வின் பிறவி பயனை அடைந்து விட்டேன் என்றார்.