மனைவியின் தங்கை யை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பைனான்சியரிடம், 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை மோசடி செய்த தம்பதி உட்பட மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் அருகே, முத்துபழநியூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 29. வடமாநிலங்களில், ‘பைனான்ஸ்’ செய்து வருகிறார். இதில் கிடைத்த பணத்தை சேமிக்க, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் அறிவழகன், 35, என்பவரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர், வருமான வரி பிரச்னையை தவிர்க்க, தான் மற்றும் தன் மனைவி கலைச்செல்வி, 30, மற்றொரு நண்பர் முருகன் பெயரில் தலா ஒன்றும், பாலசுப்பிரமணி பெயரில், இரண்டு என, ஐந்து வங்கிக் கணக்குகள் துவங்க ஆலோசனை கூறியுள்ளார். இதன்படி, 2014ம் ஆண்டு கணக்குகள் துவங்கப்பட்டது.
அந்த கணக்குகளின் ஏ.டி.எம்., கார்டுகள், பண பரிவர்த்தனையை அறிவழகனே கவனித்துக் கொண்டார். நண்பர் முருகன் மூலமாக, திண்டுக்கல் மாவட்டம் முழுதும், தனியாக பைனான்ஸ் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாலசுப்பிரமணி திருமணத்திற்காக பெண் பார்த்ததை கேள்விப்பட்ட அறிவழகன், தன் மனைவியின் தங்கை முத்துலட்சுமி, 25, என்பவரை திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். இதற்கு, முத்துலட்சுமியும் சம்மதித்தார்.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில், திருமணத்திற்காக, முத்துலட்சுமி மூலம், 45 சவரன் நகை, பணம் பெற்றுள்ளனர். சில மாதங்களுக்கு பின், முத்துலட்சுமியின் அலைபேசியில் இருந்து பாலசுப்பிரமணிக்கு பேசிய கலைச்செல்வி, ‘தங்கை வேறு ஒருவரை காதலிக்கிறார். வேறு பெண் பார்த்து கொள்ளுங்கள்’ என கூறிஉள்ளார்.
இதனால், தான் அனுப்பிய, 1.27 கோடி ரூபாய், 45 சவரன் நகையை திருப்பித் தரும்படி பாலசுப்பிரமணி கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன், அவரது அண்ணன் கண்ணன் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அவரை மிரட்டி உள்ளனர்.
பாலசுப்பிரமணியன் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, அறிவழகன், கலைச்செல்வி, முத்துலெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். கண்ணன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.