திண்டுக்கல்லில் சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் சின்ன வெங்காயம் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கிலோ ரூ.110 வரை விலை போனது. தொடர்ந்து 3 மாதங்களாக விலை குறையாமல் இருந்தது.
ஜனவரி மாதம் விலை குறையும் என்றிருந்தபோது, மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் பாதித்தது. இதனால் விலைஅதே நிலையிலேயே விற்பனையானது.
கடந்த வாரங்களில் திண்டுக்கல்லுக்கு ஆயிரம் மூடைகள் மட்டுமே வந்ததால், வெங்காய மார்க்கெட்டில் ரூ. 110 க்கு விற்கப்பட்டது.இந்நிலையில் நேற்று மைசூர், உடுமலைப்பேட்டை, தாராபுரம், ராசிபுரம் பகுதிகளிலிருந்து 5 ஆயிரம் மூடைகள் சின்ன வெங்காயம் வந்திறங்கின.
வரத்து அதிகரிப்பால் தற்போது விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை விற்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து 20 லோடு பெரிய வெங்காயம் வரத்து வந்ததால் கிலோ ரூ.20 முதல் ரூ. 35 க்கு விற்றது. கடந்த வாரம் ரூ. 55 வரை பெரிய வெங்காயம் விற்றது குறிப்பிடத்தக்கது.