பாகன்களை பிரிந்த சோகத்தில் வாடிய ஜெயமால்யதா யானை பாகன்களுடன் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானை சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி உள்ளது.
இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான ஜெயமால்யதா யானையைப் பாகன் ராஜா மற்றும் உதவி பாகன் பிரசாத் ஆகியோர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்தக் காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பாகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயமால்யதா யானை பாகன்களை பிரிந்த சோகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளாமல், உணவு சாப்பிடாமல் இருந்துள்ளது. கடந்த 22ஆம் தேதி மருத்துவ குழுவினர் யானையை பரிசோதித்து பார்த்தபோது, பாகன்கள் இல்லாததால் யானையின் குணாதிசயங்கள் மாற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது மற்ற யானைகள் மற்றும் அலுவலர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் யானையை கோவிலுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் நீதிமன்றம் பாகன்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் 2 பாகங்களையும் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் யானை ஜெயமால்யதா பாகன்களை பார்த்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளது. மேலும் யானையின் துதிக்கையை பாகன்கள் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதன்பின் யானை உணவு உண்ட பிறகு லாரியில் ஏற்றப்பட்டதை கண்ட புதுவை மணக்குளவிநாயகர் கோவில் யானை லட்சுமி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு 13 ஆண்டுகால புத்துணர்வு முகாமில் யானையை திருப்பி அனுப்புவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.