ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தின் சித்ரகூட் என்ற நகரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் இரவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண் சாக்லேட் சாப்பிட விரும்பியதால் அவினாஷிடம் இப்போதே வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அவினாஷ் நடுஇரவில் கடை கடையாக சுற்றித்திரிந்து பார்த்துள்ளார். எனினும் ஒரு கடைக்கூட திறந்திருக்கவில்லை. இதனால் எப்படியாவது தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற நினைத்த அவினாஷ் ஒரு கடையின் பூட்டை உடைத்துள்ளார்.
அதன்பின்பு கடையிலிருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 700 சாக்லேட்டுகளை திருடி வந்து தன் காதலிக்கு பரிசாக அளித்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து மறுநாள் காலையில் கடையின் உரிமையாளர்கள் ரிஷாப் கடையை திறக்க சென்றபோது கதவு உடைக்கப்பட்டு சாக்லேட்டுகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்பு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அப்போது கடையில் உள்ள சிசிடிவியில் அவினாஷ் சாக்லேட்டுகளை திருடியது பதிவாகியிருந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது தன் காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தன் நண்பர் ஒருவர் கொடுத்த ஐடியாவால் கடைக்குள் புகுந்து சாக்லேட்டுகளை திருடினேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.