கிரெடிட் கார்டு’ காலாவதியாகி விட்டதாக பேசிய நபரிடம், ஓ.டி.பி., மோசடியில் பறிகொடுத்த, 96 ஆயிரம் ரூபாயை, ஒரே நாளில், போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
தரமணியைச் சேர்ந்தவர் ஜாய், 40. கடந்த ஆண்டு, எஸ்.பி.ஐ., வங்கி ‘கிரெடிட் கார்டு’ வாங்கினார். சில மாதம் பயன்படுத்தாமல் இருந்தார். அதிர்ச்சி இரு தினங்களுக்கு முன், இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘கஸ்டமர் கேரில்’ இருந்து பேசுவதாக கூறி உள்ளார்.
தொடர்ந்து, ‘கிரெடிட் கார்டு காலாவதியாகி விட்டதால், புதுப்பிக்க வேண்டும். இதற்கு, கார்டு மற்றும் ஓ.டி.பி., எண்களை கூற வேண்டும்’ என, கேட்டுள்ளார். இதை நம்பிய, ஜாய், மர்ம நபர் கூறியதை போல், ஓ.டி.பி., எண் கூறி உள்ளார்.
சில நொடியில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 96 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது கண்டு, அதிர்ச்சி அடைந்தார். வங்கியில் முறையிட்ட போது, ‘ஓ.டி.பி., எண் கூறியதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என, கூறி உள்ளனர்.
பின், அடையாறு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.’சைபர் கிரைம்’ போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது. எந்த, ‘வாலட் ஆப்பில்’ பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என, புலனாய்வு செய்த போலீசார், இரண்டு மணி நேரத்தில், பணத்தை, ஜாய் வங்கி கணக்கில் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுத்தனர். ஒரே நாளில், பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு, ஜாய் நன்றி தெரிவித்தார்.
மோசடி நபர்கள், நேரடியாக, அவர்கள் வங்கி கணக்கில், பணத்தை பரிமாற்றம் செய்யமாட்டார்கள். பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டி, வாலட் சேவை வழியாக, பணத்தை மாற்றி, பின், அவர்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்வர்.
ஏமார்ந்த நாள் அல்லது மறுநாள், பணத்தை மீட்பது எளிது. மோசடி நபர்கள், வங்கி கணக்கில் பணம் சென்றால், மீட்பது கடினம். பண பரிவர்த்தனை அட்டை தொடர்பாக, தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு பேசினால், பதில் கூற வேண்டாம். உரிய வங்கிக்கு சென்று, சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.