பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ. 6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தக்கலையில் பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தலை முன்னிட்டு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.40 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தக்கலையில் தனிப்படை வட்டாட்சியர் சரளாகுமாரி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 15 கிலோ எடையுள்ள பழைய தங்க நகைகள் அதிகளவில் இருந்தன.
ரூ.6 கோடி மதிப்பிலான இந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. அவை கேரளாவில் உள்ள நகைக்கடைகளில் இருந்து விலைக்கு பெறப்பட்டு, உருக்குவதற்காக குமரி மாவட்ட கடைகளுக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தக்கலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட நகைகள் குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
முறையான ஆவணங்களைக் காட்டி நகைகளை பெற்றுச் செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக, வருமான வரித்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.