தேர்தல் விதிகளின்படி ஈவேரா சிலைகளை மூட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறை நடத்தை விதிகளின் படி தலைவர்கள் சிலைகள், படங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் மூச்சந்திகளில் இருக்கும் திராவிட கட்சிகளின் தலைவராக கருதப்படும் ஈ.வெ.ராமசாமி எனும் ஈ.வெ.ராவின் சிலைகள் மட்டும் ஏன் மூடப்படவில்லை? என்ற கேள்வியை எழுப்பி யுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக ஈ.வெ.ராவின் சிலைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையேல் ஜனநாயக வழியில் இந்து முன்னணி போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய கடித விவரம்…
தமிழகத்தில் ஏப்-6ல் தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டுள்ளன.
காமராஜர், எம்ஜிஆர், அண்ணாதுரை ஆகியோரது சிலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் திராவிட கட்சிகளின் தந்தை என கூறப்படும் ஈவேராவின் சிலைகள் மட்டும் தமிழகத்தில் எங்கும் மூடப்படவில்லை. இது தேர்தல் விதிமுறைகளை அவமதிப்பதாகும்.
மேலும் ஈவேரா சிலைகளை மட்டும் திறந்து வைத்திருப்பது என்பது அரசியல் பாரபட்சமானது ஆகும் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்ட மேடையில் கூட ஈவேராவின் படம் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்தில் ஈவெரா விரும்பிய சமூகநீதி ஆட்சியை, திமுக ஆட்சியில் வழங்குவேன் என திமுக தலைவர் திரு.மு.கஸ்டாலின் அந்த கூட்டத்தில் பேசி உள்ளார். தமிழக தேர்தல் அரசியலில் ஈவேராவும் ஒரு முக்கிய கருப்பொருள்.
பெரும்பாலான திராவிட கட்சிகளின் பொதுக்கூட்ட மேடைகளிலும் சுவரொட்டிகளிலும் துண்டு பிரசுரங்களையும் ஈவேராவின் படம் அச்சிடப்பட்டு இருக்கும். திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த காலங்களில் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்
எனவே தமிழகம் முழுவதும் உள்ள ஈவேராவின் சிலைகளும் எல்லா அரசியல் தலைவர்கள் சிலைகள் போல பாரபட்சமின்றி மூடப்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
அப்படி மூடப்படவில்லை என்றால் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தை காக்க இந்து முன்னணி, தமிழகம் முழுவதும் உள்ள ஈவெராவின் சிலைகளை மூடும் பணிகளில் ஈடுபட நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்… என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.