திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்த பெற்றோர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உள்ள வேப்பூரை அடுத்த சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், திட்டக்குடி அடுத்த வசிஸ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் என்பரின் மகள் அன்புச்செல்விக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அன்புசெல்வி ஒரு தடகள வீராங்கனை. இதனால் தான் மேற்படிப்பு படித்து விளையாட்டு பிரிவில் அரசு வேலை பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்துள்ளார். இதனால் திருமணம் ஆன போதே செல்வத்திடம் தனது குறிக்கோள் குறித்து கூறி இப்போதைக்கு தாம்பத்யம் வேண்டாம் என கூறியுள்ளார்.
அதற்கு செல்வமும் சம்மதிக்கவே இரண்டு வருடங்கள் அன்புசெல்வி படிக்கும் வரை அவருக்கு துணையாக செல்வம் இருந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அன்புசெல்வி தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் செல்வம் ஒருநாள் வலுக்காட்டாயமாக தாம்பத்திய உறவு வைத்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது தான் அன்புசெல்வி திருநங்கை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் அன்புசெல்வியின் பெற்றோரிடம் கேட்ட போது அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து செல்வம் திட்டக்குடி போலீஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு புகாரளித்தார். இந்த வழக்கை விருதாச்சலம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் விசாரித்து வந்தார்.
மருத்துவ பரிசோதனையில் அன்பு செல்வி திருநங்கை என்பது தெரிய வந்தது. வழக்கில் செல்வம் தரப்பில் நியாயமிருந்ததையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்த அன்பு செல்வி, தந்தை அசோகன், தாய் செல்லம்மாள் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பளித்தார்.