ஜேஷ்டா மகாசன்னிதானம் ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகளிடம் திருமணத்தைப் பற்றி கேட்கும் சிஷ்யர் ..
சிஷ்யர்: .வரதட்சணை கொடுக்க வேண்டியதால் திருமணங்களில் செலவு அதிகமாகிறது. ஆதலால் பல தாய் தந்தையர்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதனைப் பற்றி ஆச்சாரியாரின் உபதேசம் என்ன?
ஆச்சார்யாள்: வரதட்சணை சரி என்று சாஸ்திரங்களில் கூறப்படவே இல்லை. கன்யாதானம் என்பதே ஒரு பெரிய தானம். அந்த தானத்தை முழுமையாக்குவதற்காக மற்றொரு தானமாக வரதட்சணை தேவையில்லை. ஒரு பெண்மணியின் தந்தை இறந்தபிறகு இருக்கும் ஒரு வருட ஆசௌச காலத்திலும் கன்யாதானம் செய்யலாம் என்றால் அது எவ்வளவு பெரிய சிறப்பான தானம் என்று தெரிந்து கொள்ளலாம். வரதட்சணை வாங்கும் பழக்கம் பேராசையால் தான் ஏற்படுகிறது. அதை நீக்கிவிடவேண்டும்.
சிஷ்யர்: ஆச்சாரியாள் சிஷ்யர்களுக்கு வரதட்சணை வாங்க வேண்டாம் என்று உபதேசம் கொடுப்பதுண்டா?
ஆச்சார்யாள்: அந்த உபதேசத்தை நான் எல்லோருக்கும் கொடுப்பேன். அவர்கள் பக்தர்கள் ஆனாலும் சரி பக்தர்கள் இல்லாவிட்டாலும் சரி. இக்காலத்தில் பலர் வரதட்சணை வாங்கக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் தான் செயலில் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். மக்கள் இவ்வாறு செய்யும் கெட்ட பழக்கத்தை என்று விடுவார்களோ அப்போதுதான் வரதட்சணை வாங்கும் பழக்கமும் நிற்கும்.
சிஷ்யர்: கல்யாணத்திற்காக அதிகமாகச் செலவழிப்பது பற்றி ஆச்சாரியாளின் கருத்து என்ன?
ஆச்சாரியாள்: சாஸ்திரங்கள் திருமணத்தின் போது சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகின்றன. எங்கேயும் சாஸ்த்திரங்கள் ஒரு பெரிய ரிசப்சன் பார்ட்டி வைக்கவேண்டும் என்றும் அதிக விலையுள்ள பட்டுப்புடவைகளையோ பல விதமான நகைகளையோ வாங்க வேண்டும் என்று கூறுவதில்லை. புத்தாடை என்றால் அதிக விலையுள்ள ஆடை என்று அர்த்தமில்லை. திருமணங்களில் அதிகம் செலவாகிறது என்றால் அதற்கு சாஸ்திரங்கள் காரணமல்ல. மக்கள் வீணாகப் பணத்தைச் செலவழித்தால் அது அவர்களின் தவறு தானே
சிஷ்யர்: பிராமணர்களில் வடமாள் பிரஹச்சரணம் போன்ற உட்பிரிவுகளை சேர்ந்தவர்களில், ஒரு உட்பிரிவு சேர்ந்தவர் மற்றொரு உட்பிரிவை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆச்சார்யாள்: இம்மாதிரி உட்பிரிவுகளை பற்றி சாஸ்த்திரங்கள் ஒன்றும் கூறவில்லை சாஸ்திரங்களை பொறுத்தவரையில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ஆனால் உட்பிரிவுகளில் ஒருவருக்கு ஒருவர் திருமணம் செய்து கொள்வது தவறு என்று சாஸ்திரங்களில் கூறப்படவில்லை.
சிஷ்யர்: சில ஊர்களில் ஒரு பெண் தன் மாமாவையோ மாமாவின் மகனையோ அல்லது வேறு உறவினரையோ திருமணம் செய்யும் பழக்கம் இருக்கிறது. சில விஞ்ஞானிகள் இதுபோன்ற திருமணம் பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நிலைக்கு நல்லதில்லை என்று கூறுகிறார்கள். இம்மாதிரி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்களில் ஏதாவது கட்டளை இருக்கிறதா?
ஆச்சாரியாள்: வேதங்களில் உபநயனத்திற்கும் ஸந்யாஸம் பெறுவதற்கும் தெளிவான கட்டளையே இல்லை. ஆனால் திருமணம் சம்பந்தப்பட்ட வேத மந்திரங்களைப் பார்த்த பிறகும் ஸ்ம்ருதி புத்தகங்களைப் பார்த்த பிறகும் அனுமானம் செய்து வேதங்களில் திருமணம் செய்து கொள்ள அனுமதி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது. உறவினர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டளை இல்லை. அதேபோல் உறவினர்களுக்குள் செய்து கொள்ளக் கூடாது என்ற கட்டளையும் இல்லை மாமாவை திருமணம் செய்துகொள்வது அவ்வளவு பொருத்தம் இல்லை என்பது என் கருத்து. இம்மாதிரி உறவினர்களை திருமணம் செய்துகொள்வது பழக்கத்தினால் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரி செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை ஜனங்கள் தாமாகவே தெரிந்துகொள்ளலாம்.