சிஷ்யர்: பல சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு நிச்சயமாக தெரிவதில்லை. எது சரி எது தவறு என்கிற குழப்பம் பல தடவை ஏற்படுகிறது இம்மாதிரி சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும்?
ஆச்சார்யாள்: சில சமயங்களில் எது சரி எது தவறு என்று தெரிந்தும் மனதில் குழப்பமாக இருக்கும். இது ஏனென்றால் நல்ல வழி கடினமாக இருக்கும். கெட்ட வழி எளிதாக இருக்கும். அதனால் அவ்வித குழப்பம் ஏற்படும். ஆனால் நாம் அச்சமயத்தில் சரியான வழியைத் தான் கடைபிடிக்க வேண்டும். நமக்கு சௌகரியம் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் நல்ல வழியே சிறந்தது. வேறு சில சமயங்களில் ஒரு வழியில் செய்தாலும் அதற்கு மாறாக செய்தாலும் அது சாஸ்திரத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் எதிராக இருக்காது இம்மாதிரி சூழ்நிலைகளில் எப்படி செய்தாலும் தவறில்லை.
எது சரி எது தவறு என அறிந்துகொள்ள நாம் சாஸ்திரங்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ண பரமாத்மா,
ஞாத்வா சாஸ்த்ரவிதாநோக்தம் கர்ம கர்துமிஹார்ஹசஸி (சாஸ்திரங்களின் கட்டளைகளை தெரிந்து கொண்டு இங்கு காரியங்களை செய்ய வேண்டும்) என்று கூறியிருக்கிறார்.
சாஸ்திரங்களின் விஷயத்தில் நமக்கு அறிவு அவ்வளவு இல்லாவிட்டாலும் மகான்கள் இதுபோன்ற சூழ்நிலையில் எவ்வாறு நடந்தார்கள் என்று கவனித்து நாமும் அது போல் நடந்து கொள்ள வேண்டும்.
யதா தே தத்ர வர்தேரன் தாதா தத்ர வர்ததோ: ( மகான்கள் இதுபோல சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதே போல் நடந்து கொள்) என உபநிஷத் கூறுகிறது.
ஒருவனுக்கு சந்தேகமிருந்தால் குருவிடம் சென்று சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படி குரு சன்னதிக்கு செல்ல இயலாதென்றால் புனிதமான சான்றோரிடம் சென்று என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சில விசேஷமான சமயங்களில் ஒருவனுக்கு அந்த சமயத்திலேயே முடிவு செய்ய வேண்டி வரும். அந்த சமயத்தில் மனதில் குழப்பம் இருக்கும் கேட்பதற்கும் தகுந்தவர்கள் இல்லாமல் இருக்கலாம். இது போன்ற சமயங்களில் இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு பிறகு எது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுபோல் செய்யலாம். ஆனால் இச்சமயத்தில் நம் மனம் ஆசையினால் தூண்டப்பட்டு நம்மை தவறான வழிக்கு அழைத்துச் செல்கிறதா என்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.