மதுரை டி குன்னத்தூரில் அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டினார். அண்மையில் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அதிமுகவில் தற்போது வேட்பாளர்கள் தேர்வு குறித்து புகார் எழுந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் புறக்கணிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் மதுரையில் உள்ள ஜெயலலிதா கோவிலில் அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என புகார் கூறி அவர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
கட்சியின் தொடக்க காலத்தில் இருந்து பணியாற்றி வருவதாகவும் ஆனால் இதுவரை ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் தன்னை பூத் ஏஜெண்டாக நியமிக்கவில்லை எனவும் கூறி அவர் தீக்குளித்ததாக அதிமுகவினர் தரப்பில் தெரிவிக்கின்றனர். பலத்த தீக்காயம் அடைந்துள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வேட்பாளர்கள் நியமனத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில், மூத்த நிர்வாகி ஒருவர் பூத் ஏஜெண்டாக நியமிக்கக்கோரி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது