தேனி அருகே காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்த காதலியை காப்பாற்ற காதலனும் கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தேட்டப்பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துமாரி (38) கணவர் இறந்த நிலையில் துர்கேஸ்வரன் (21) துர்காதேவி (20) வைஷ்ணவி (18) என்ற மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மகன் துர்கேஸ்வரன் வீரபாண்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கிடையே துர்கேஸ்வரன் மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்வர்யா (18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்ப வீட்டைவிட்டு வெளியேறிய ஐஸ்வரியா காதலன் துர்கேஸ்வரனை திருமணம் செய்து அவரது வீட்டிலே கடந்த ஒரு வாரமாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் மாமா அழகேசன் துர்கேஸ்வரன் வீட்டிற்கு வந்து தன்னுடன் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த ஜஸ்வர்யா வீட்டிற்கு வெளியே இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட காதலன் துர்கேஸ்வரனும் செய்வதறியாமல் அவரும் கிணற்றில் குதித்தார். கிணற்றில் நான்கு அடிக்கு மட்டும் தண்ணீர் இருந்ததால் காதல் ஜோடி இருவரும் காயங்களுடன் உயிருக்கு போராடினர். இச்சம்பவம் குறித்து தேனி தீயணைப்புத் துறையினர் தகவல் அளிக்கப்பட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 100 அடி ஆழம் உள்ள கிணற்றில் இரங்கி 30 நிமிடத்திற்குள் காதல் ஜோடியை கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த காதல் ஜோடியை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.