இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடக மாநில அரசின் சார்பில் நகைக்கடை தொடங்கப்படுகிறது என அமைச்சர் முருகேஷ் நிராணி கூறினார்.
மாநில சுரங்கம் மற்றும் கனிம துறை அமைச்சர் முருகேஷ் நிராணி நகைக்கடை சிறு வணிகர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நிராணி கூறியதாவது: ஹட்டி கோல்டு தங்கச் சுரங்கம் ராய்ச்சூரு மாவட்டத்தில் உள்ளது. இதில் இருந்து வருடம் 1,700 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதை 5 ஆயிரம் கிலோ ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது.
அத்துடன், அரசின் சார்பில் நகைக்கடை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த நகை கடையில் முதற்கட்டமாக தங்ககட்டிகள் விற்பனை செய்யப்படும். நமது மாநிலத்தில் மட்டும் இன்றி வெளி மாநிலத்திலும் விற்பனை மையம் தொடங்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக நகைக்கடை திறக்கப்படுகிறது. நகைக்கடையின் பெயர் உள்ளிட்ட விஷயங்கள் பரிசீலனை நடத்தி வருகிறோம்.
தங்க நாணயம் வெளியிட வேண்டும் என சிறு வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட நிகழ்வின் போது தங்க நாணயத்திற்கு தேவை அதிகம் ஏற்படும் என்பதால் அது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மைசூரு லேம்ப் தொழிற்சாலை, மைசூரு சாண்டல் சோப் தொழிற்சாலை வரிசையில் கர்நாடக மாநிலத்திற்கு நகைக்கடையும் பெயர் பெற்று தரும் என எதிர்பார்க்கிறோம்.
கனிம தொழில் தொடங்குவதற்கான விதியில் எளிமை செய்துள்ள நிலையில் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்கான புதிய முயற்சி நகை விற்பனை திட்டமாகும்.
இதற்காக ஹட்டி தங்கச்சுரங்கம் என்பதை கர்நாடக மாநில தங்கச்சுரங்கம் என மாற்றப்பட்டுள்ளது, என்றார்.