கோயம்பேடு அருகே போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் மணல் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்டிப்பதை விட்டு விட்டு அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுப்புவதாக காவலர்கள் மீது குற்றசாட்டுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு அருகே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்கும் காட்சி செல்போனில் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் வாகன தணிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரி ஒருவர், மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதன் டிரைவரிடம் ‘முதலில் ரூ.1,000 கேட்பது போலவும், மணல் ஏற்றி வந்ததற்கான உரிய சான்று உள்ளது என்று அந்த டிரைவர் கூறவே அப்படி என்றால் ரூ.500 லஞ்சம் கொடுத்து விட்டு செல்’ என்று கூறுவது போலவும் பதிவாகி இருந்தது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.