பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. 27ஆம் தேதி திருக்கல்யாணமும் 28ஆம் தேதி பங்குனி உத்திரவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.
பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினமும், உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் தான் சிவ பெருமான் – பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. முருகன் இந்த நாளில்தான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
பங்குனி உத்திரம் நாளில்தான் ராமன் சீதை திருமணம் நடைபெற்றது. ரங்கமன்னார் ஆண்டாள் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த பல கோவில்களில் பங்குனி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
திருவிழாவின் ஆறாம்நாள் மார்ச் 27 ஆம் தேதி இரவு 7.15 மணி முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளித்தேரோட்டம் அன்று இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது.
பங்குனி உத்திரவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மார்ச் 28 ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. மார்ச் 31 ம் தேதி கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக பழநி பேருந்துநிலையம், கோயில் அலுவலகம், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் அலுவலகத்தில் பக்தர்களின் அவசர உதவிக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் 1800 425 9925, 04545-240293 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.
பக்தர்கள் நீராடும் இடும்பன்குளம், சண்முகநதியில் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.