சிஷ்யர்: கங்கை ஒருவனின் பாவங்களைப் போக்குகிறது என்று நம்பப்படுகிறது இது உண்மையாகவே அவ்வாறு ஆகிவிடுமா?
ஆச்சாரியாள்: ஆம் அதுபற்றி சந்தேகம் என்ன?
சிஷ்யர்: அப்படி ஒருவனின் பாபத்தைப் போக்கிவிடும் என்றால் எந்த பாவத்தை வேண்டுமானாலும் செய்து விட்டு அதற்குப் பிறகு கங்கையில் ஸ்நானம் செய்து கொள்ளலாமே..?
ஆச்சார்யாள்: கங்கையில் செய்த ஸ்நானம் அறியாமையால் செய்யப்பட்ட பாவங்களைப் போக்கிவிடும். மேலும் அறிந்து எப்போதாவது செய்யப்பட்ட எந்த பாவங்களுக்காக வருகிறோமோ அந்த பாவங்களையும் போக்கி விடும். கங்கையில் ஸ்நானம் செய்து பாவங்களை போக்கிக் கொள்வேன் என்ற எண்ணத்தோடு வேண்டுமென்றே செய்யப்பட்ட பாவங்களிலிருந்து கங்கை விடுதலை தருவாள் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. இவ்வாறு கூறுவதில் இருந்து கங்கையின் மகிமையைப் பற்றி சற்றும் சந்தேகப்பட வேண்டாம் கோடிக்கணக்கான மக்கள் வெகு தூரம் பிரயாணம் செய்து கங்கை என்னை புனிதமாக்குவாள் என்று தீவிரமான சிரத்தையுடன் செல்கிறார்கள். இறைவன் அவர்களுடைய சிரத்தையை வீண்ணாக்குவதற்கு விரும்பமாட்டான்.
இது சம்பந்தமாக ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு. பார்வதி ஒரு சமயம் பரமசிவனிடம் எல்லோருடைய பாவங்களையும் கங்கை நீக்கி விடுவாளா என்று கேட்டாள். சிவன் பார்வதியை அழைத்துக்கொண்டு ஒரு கிழவர் வேடம் பூண்டு வந்து தான் ஆற்றில் முழுகுவதாக நடிப்பதாகவும் பார்வதி தன்னை காப்பாற்ற அங்கு போவோர் வருவோரை அழைக்குமாறும் கூறினார். மாறுவேடத்தில் இருந்த பார்வதியும் ஆற்றில் முழ்கியவாறு இருக்கும் தன் கணவரை காக்க யாரேனும் வருவார்களா என கூக்குரல் இட்டாள்.
மக்கள் அங்கு வந்தனர். அன்னை யார் பாவம் சிறிதுகூட செய்யவில்லையோ அவர்தான் என் கணவரை தொடலாம் என்று கூறினாள். எல்லோரும் தயங்க அங்கு வந்த ஒரு மனிதர் சற்றும் தயங்காமல் ஆற்றின் நீரில் நீந்திச் சென்று சிவனாகிய கிழவரை காப்பாற்றினார். அந்த மனிதரை நோக்கி உங்களுக்கு பாவங்களே இல்லையா என பார்வதி வினவ நான் உங்கள் கணவரை காப்பாற்றுவதற்கு முன் கங்கையில் மூழ்கி தானே சென்றேன். அப்பொழுதே என் பாவங்கள் போய்விட்டன என்று சொல்லிச் சென்றாராம். பரமசிவன் பார்வதியிடம் இவரை போன்ற சிரத்தை இருந்தால் பாவங்கள் எல்லாம் போய்விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று பதிலுரைத்தார். கங்கையின் மகிமை அத்தகையது.