தில்லியில் மாமியார் மற்றும் மனைவியின் சகோதரிக்கு தாலியம் என்ற ரசாயனத்தை கொடுத்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்த வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அரோராவின் மாமியார் உடம்பில் தாலியம் என்ற ரசாயனத்தின் தடயங்கள் இருந்ததாகவும், மனைவியின் சகோதரியும் இதன் காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இறந்தவர்கள் மட்டுமின்றி, அவரது மனைவி, மனைவியின் தந்தை மற்றும் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஆகிய அனைவரின் உடலிலும் நச்சுத்தன்மையின் தடயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அரோராவிடம் கேட்டப்போது, மனைவியின் குடும்பத்தினர் தன்னை அவமதித்ததால் அவர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.
இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவருடைய வீட்டை ஆய்வு செய்தபோது, தாலியம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மொபைலிலும் தாலியம் வாங்கியதற்கான தகவல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.