ஆம்பூர் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ஒரு வயதில் நேத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று குழந்தை நேத்ரா வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் விளையாடி கொண்டிருந்தது.
சிறிது நேரம் கழித்து பிரியங்கா சென்றபோது, குழந்தை மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து அவர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது, தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.
இதனை அடுத்து, குழந்தையை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.