டேராடூனில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், துணைப் பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிகாரி பரத் ஜோஷி, ராணுவப் பொறியியல் பிரிவில் பணியாற்றியபோது ஒப்பந்ததாரர் ஒருவருக்கு பணிகள் முடிவடைந்ததற்கான சான்றிதழ் வழங்குவதற்காக ரூ. 38 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உதவிப் பொறியாளராகப் பணியாற்றிய மனீஷ் சிங், லஞ்சத்தை ஒரே தவணையாக வழங்கும்படி ஒப்பந்ததாரருக்கு அழுத்தம் கொடுத்தார்.
அதன்பேரில், உபகரண ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள கட்டடத்தில் அவர்களிடம் ஒப்பந்ததாரர் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் கொடுத்ததுடன், இதுதொடர்பாக, சிபிஐ போலீஸில் புகார் அளித்தார்.
தொடர்ந்து, 2ஆவது தவணை லஞ்சத்தை அவர் கொடுத்தபோது, பரத் ஜோஷி, மனீஷ் சிங் ஆகியோரை சிபிஐ போலீஸார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை, நீதிபதி சுஜாதா சிங் விசாரித்து, பரத் ஜோஷிக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 55 ஆயிரம் அபராதம், உதவிப் பொறியாளர் மணீஷ் சிங்குக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.