உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை கண்டுகளிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
கொரோனா காரணமாக கோவில் திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் வருகின்ற 23ம் தேதி நடைபெறவிருந்த பெரிய கோவில் தேரோட்டம் 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ள சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து 18 நாட்களிலும் பெரிய கோவில் வளாகத்தின் உள்ளேயே சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் அச்சத்தால் குறைந்த அளவிலான பக்தர்களே கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது மயில் ஒன்று தோகை விரித்து ஆடியதை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இந்த சித்திரை பெருவிழாவில் 18 நாட்களும் காலை திருமுறை விண்ணப்பமும், மாலை திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.