தமிழகத்தில் மொத்தம் 35,233 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்கள் மானிய விலையில் சர்க்கரை, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
பொதுவாக குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டால், உயிரிழந்த குறிப்பிட்ட அந்த நபரின் பெயரை குடும்ப அட்டையிலிருந்து நீக்க வேண்டும்.
அதேபோல், யாரும் இல்லாமல் தனியாக வாழும் ஒருவர் இறந்து விட்டால் முறைப்படி அந்த தனி ரேஷன் கார்டை ஒப்படைத்து அதனை நீக்கி விட வேண்டும்.
ஆனால் உயிரிழந்த தனி நபரின் ரேஷன் கார்டை பயன்படுத்துவது இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாக கருதப்படும். அந்த வகையில் ஒரு சிலர் தனி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த தனி ரேஷன் கார்டு மூலம் சில கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற கொள்ளையில் ரேஷன் கடை ஊழியர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மை..
பெரும்பாலும் உள்ளூரைச் சேர்ந்தவகள் தான் ரேஷன் கடை ஊழியராக பணிபுரிகிறார். எனவே ஊரில் யார் இறந்து போனாலும் அவர்களுக்கு உடனடியாக தெரிந்து விடும். அந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பது தொடங்கி, அரசின் நிவாரணம், உதவித் தொகை என அனைத்தையும் கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது.
தனிநபர் இறந்துவிட்டாலும், அந்த கார்டை அரசிடம் ஒப்படைக்காமல், ரேஷன் கடை ஊழியர்களே அதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால் செல்போன்களுக்கே குறுஞ்செய்தி வந்து விடுகிறது. இதனால், இத்தகைய மோசடிகள் வெளிவர தொடங்கி உள்ளன.
இதுகுறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டை முடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.