வாட்ஸ் ஆப்பில் ஆபாச படம் அனுப்பி, இளைஞர் தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, எஸ்பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை நரிப்பாளையத்தை சேர்ந்த, 21 வயது கல்லூரி மாணவி, ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம் அளித்த புகார் மனு: தாராபுரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறேன். ஈங்கூர் கவுண்டனூர் மணிகண்டன், 27, என் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பல தொல்லைகள் கொடுத்து வந்தார்.
வாட்ஸ் ஆப்பிற்கு ஆபாச படங்களை அனுப்பி, வீடியோ கால் மூலமாக பேசி தொல்லை கொடுத்து வந்தார். கல்லூரி வாயிலில் நின்று கொண்டு, அவரிடம் பேசா வீட்டால் கல்லூரிக்குள் நுழைந்து படிப்பையும், வாழ்க்கையையும் கெடுத்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
கடந்த, 18ல் கல்லூரி முன் வந்து மணிகண்டன், அவரது நண்பர்கள் நின்றிருந்தனர். மணிகண்டனை என் பெற்றோர் பிடித்து, சென்னிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மணிகண்டனின் பெற்றோரையும் அழைத்து, இரு தரப்பினரையும் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணிகண்டனின் தம்பி தாமோதரன், தந்தை சென்னியப்பன், தாய் ரத்தினாள் மற்றும் உறவினர்கள், என் தாய் மாமாவை ஹெல்மெட்டால் தாக்கினர்.
எனக்கு தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு, திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டன், அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.