இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் 2 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 57 வயதான மனிஷா ஜாதவ், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மும்பை சிவ்ரி காச நோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, மனிஷா ஜாதவ்.
இவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவர் உயிரிழப்பதற்கு 19 மணி நேரத்திற்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ‘இதுதான் எனது கடைசி காலை. நான் இனி உங்களை இங்கே சந்திக்க மாட்டேன். அனைவரும் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். உடலுக்குத்தான் மரணம். ஆத்மாவுக்கு இல்லை’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டே கொரோனா காலத்தில், சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் தொடர்ந்து உயிரிழந்தனர். பாதுகாப்பு ஆடை, சரியான உணவு இல்லை என்று மருத்துவர்கள் புகார் அளித்தனர். மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளிக்க முடிவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தகவல்படி மகாராஷ்டிராவைச் சேர்ந்த 18,000 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 168 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் மகாராஷ்டிராவில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் வலியுறுத்தி உள்ளார்.