தஞ்சையில் முககவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவலரை, தகாத வார்த்தைகளால் திட்டிய பெண்ணிற்கு மனநலம் பாதிப்பு இருப்பதாக அவரது சகோதரர் தற்போது விளக்கமளித்துள்ளார்.
தஞ்சை பேருந்து நிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, முககவசம் அணியாமல் வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அந்த காவலரை தகாத வார்த்தைகளால் வசைப்பாடிய பெண், மாவட்ட ஆட்சியரையும் திட்டி தீர்த்திருந்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அப்பெண் மீது தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் அந்த பெண் மனோஜிபட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நந்தினி என தெரியவந்தது.
இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் நந்தினி பற்றி திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
நந்தினி பைபோலார் டிஸ்ஆர்டர் நோயால் நந்தினி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது குடும்பத்தினர் சிகிச்சை தொடர்பான சான்றிதழையும் போலீசாரிடம் காட்டியுள்ளனர்.
மேலும் காவல் நிலையத்துக்கு தங்கையை அழைத்து வந்த அவரது சகோதரர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 3 ஆண்டுகளாக தங்கை மனநலம் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்கைக்கு கொரோனா பற்றி எதுவும் தெரியாது என கூறிய அவர், தெரியாமல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை திட்டிவிட்டதாக மன்னிப்பு கேட்டார்.
மேலும் மனிதாபிமான அடிப்படையில் அவளை மன்னித்து அவள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதையடுத்து இரண்டு விதமான மனநிலையில் இருக்கும் அப்பெண் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் போலீசாரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் மனநலம் பாதித்த பெண்ணை தனியே வாகனத்தை ஓட்டிச்செல்ல அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து அனுப்பி உள்ளனர் காவல்துறையினர்.