இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை ஓரியூர் திட்டை பகுதியை சார்ந்தவர் லூர்து ஆல்வின் (வயது 31). ஆல்வின் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்திருந்த ஆல்வின், திருமண வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது நண்பருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க இரு சக்கர வாகனத்தில் ஓரியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொண்டிக்கு சென்றுகொண்டு இருந்த தருணத்தில், வட்டானம் சோதனைச்சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதியுள்ளது.
இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆல்வின் சாலையோரம் மயங்கி விழவே, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எஸ்.பி. பட்டினம் காவல் துறையினர், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் பாலகுருவை (வயது 37) சிறையில் அடைத்தனர்.