தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ம் தேதியும், அதற்கு முந்தைய தினத்திலும் முழு ஊரடங்கு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், வாக்குப் பதிவு ஆகியவை முடிவுற்ற நிலையில், இதுவரை இல்லாத அளவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிறு தோறும் மற்றும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது தமிழக அரசு!
இந்நிலையில் வரும் மே 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளிலேயே அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அதிகம் ஒன்றுகூட வாய்ப்பு உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அரசு விடுமுறை நாளான மே 1 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் முகவர்க்கு மட்டும் விலக்கு அளிக்கவும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதனைத் தடுக்கும் நோக்கில் மட்டுமே அன்றைய நாட்களில் ஊரடங்கைப் பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்வதாகவும், இதில் எந்தவித அரசியல் பின்புலமும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.