சென்னையில் நேற்று அம்மா உணவகத்தை திமுக.,வினர் சூறையாடிய நிலையில், இன்று நாகப்பட்டினத்தில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர்ப் பலகை, கட்டத்தின் ஒரு பகுதி ஆகியவை சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நேற்று சென்னை மாநகராட்சி 92வது வார்டு முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களைத் தூக்கி வீசி, வெளியே வைத்திருந்த அம்மா உணவகம் பெயர்ப் பலகையை கிழித்து எறிந்து, போட்டோவையும் சேதப்படுத்தி தரையில் வீசினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பெயர்ப் பலகை, பொருட்களை சீரமைக்கவும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஏழை எளியோருக்காக தொடங்கப்பட்ட ‛அம்மா உணவகத்தை’ திமுக.,வினர் சூறையாடிய நிகழ்வுகள் நடைபெற்ற மறு நாளே நாகப்பட்டினத்தில் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாகை மாவட்டம் அவரிக்காட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‛அம்மா மினி கிளினிக்’ கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை உள்ளிட்டவற்றை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக.,வினர் கோரியுள்ளனர்.
அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா மினி கிளினிக். இதுதான் ஸ்டாலின் சொன்ன விடியலா?? 🤬🤬 #DMKFailsTN pic.twitter.com/lNWq5SrRWK
— அஇஅதிமுக (@ADMKofficial) May 5, 2021