இளைஞர்கள் அதிகம் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் சேவல் குழுவில் சேர்ந்த சிறப்பு சலுகை என்று குறுந்தகவல் பகிரப்பட்டது. அதை க்ளிக் செய்தால் Video Call Available என்ற குழுவிற்கு அழைத்துச் சென்றது.
அதில் அழகான இளம்பெண்களின் புகைப்படங்களை பகிர்ந்த அட்மின்கள், அவர்களுடன் பேச கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஆடியோவையும் பகிர்ந்தனர்.
ஒரு மணி நேரம் வீடியோ காலில் பேச ரூ500.. ஆடையின்றி ஒரு மணி நேரம் வீடியோ காலில் கொஞ்ச ரூ700.. ஒரு மாதம் முழுவதும் பெண்களின் சேவை கிடைக்க வேண்டுமா? உடனே ரூ.3000 செலுத்துங்கள் என கூவினர். ஊரடங்கில் காய்ந்துபோய்க்கிடக்கும் இளைஞர்கள் சிலர் இதையும் உண்மை என நம்பி, பணத்தை செலுத்தியுள்ளனர்.
இன்னும் இரண்டு பெண்கள்தான் இருக்கிறார்கள். வேகம் வேகம் என அட்மின்கள் இளைஞர்களை உசுப்பிவிட்டார்கள்.
சிலருக்கு ஸ்பெஷல் ஆபர். ரூ.300 மட்டும் செலுத்தினால் போதும் என அட்மின்கள் கூற, இளைஞர்கள் ஆவலுடன் பணத்தை செலுத்தியுள்ளனர் அதற்கு பிறகுதான் விளையாட்டே ஆரம்பித்தது.
ஆர்வத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள் அதற்கான ரசீதை அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்தனர். பணம் செலுத்தியவர்கள் அடுத்த நொடியே அந்த குரூப்பை விட்டு நீக்கப்பட்டனர்.
ஏன் நீக்கினீர்கள் என அட்மினிடம் கேள்வி கேட்ட இளைஞர்களின் எண்களை அக்கும்பல் பிளாக் செய்தது, வேலையும் முடிந்தது.
இப்படி பல நூறு இளைஞர்களை தினமும் இக்கும்பல் ஏமாற்றி வருகிறது என்கிறார் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர். இந்த சேவல் வாட்ஸ் அப் குழுவின் தொடர்பை 15 பேருக்கு பகிர்ந்தால், அவருக்கு 15 நிமிடம் இலவச வீடியோ கால் என சிறப்பு சலுகையையும் அட்மின்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், இந்த குழுவில் மணிக்கு 10 பேர் புதிதாக இணைந்துகொண்டே இருக்கிறார்கள். பணத்தை கட்டியவர்கள் நீக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..
பணத்தைக் கட்டி ஏமாந்த இளைஞர்களோ போலீசிடமோ, பெற்றோரிடமோ இதை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களின் பயத்தையே மூலதனமாகக்கொண்ட அந்த மோசடிக்கும்பல், பணத்தை திருப்பிக்கேட்டால், வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவோம் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
என்ன செய்வதென்று தெரியாமல், இந்த மோசடிக்கும்பலிடம் சிக்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
போலியான ஆவணங்களை கொண்டு வங்கிக்கணக்கு, சிம்கார்டுகளை இக்கும்பல் வாங்கியிருக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் கருதுகிறார்கள்.
காவல்துறை உடனடியாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது