தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 வயது சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.
திருவண்ணாமலை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் கூலித் தொழிலாளி லட்சுமணன். இவரது 2 வயது மகன் வெற்றிவேல். இந்த சிறுவன் நேற்று முன்தினம் காலை உணவு உட்கொள்ள முடியாலும் மற்றும் தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில், சிறுவனின் உணவுக் குழாயில் நாணயம் வடிவில் ஒரு பொருள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, காது, மூக்கு,தொண்டை பிரிவு தலைவர் மருத்துவர் இளஞ்செழியன் தலைமையில் சிறப்பு மருத்துவர் சிந்துமதி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.
மயக்கவியல் பிரிவு தலைவர் மாதவகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்தனர். இதையடுத்து, அறுவை சிகிச்சை இல்லாமல் எண்டோஸ்கோபி மூலமாக சிறுவனின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த பொருள் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.
பின்னர் அந்த பொருளை பார்த்தபோது, உணவுக்குழாயில் அடைத்திருந்தது ஒரு ரூபாய் நாணயம் என தெரியவந்தது.
இது குறித்து சிறப்பு மருத்துவர் இளஞ்செழியன் கூறும்போது, ‘குழந்தை மற்றும் சிறுவர்களை பெற்றோர் கவனமாக கண்காணிக்க வேண்டும். அவர்களை விளையாட விட்டு விட்டு, தங்களது பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
மேலும், நாணயம் உள்ளிட்ட சின்னஞ்சிறிய பொருட்களை, குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எட்டும் தொலைவில் வைக்கக்கூடாது. அதேபோல், விளையாடுவதற்காக நாணயங்களை வழங்கக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் கண்காணிக்க வேண்டும்’ என்றார்