அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக கிராமமக்கள் இருளில் தவிப்பதுடன் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் வெங்காத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் இரவில் இருளில் தவிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 3 வாரமாக காலை மற்றும் மாலை வேலையில் தொடர் மின்வெட்டு வருவதாகவும், மின்வாரியத்தை தொடர்பு கொண்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதனால் விளைநிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த அத்தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மின்வெட்டு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மின் தடை செய்யப்படாது என கடந்த ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் மின்தடை ஏற்பட்டது என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், பராமரிப்பு பணிகள் எந்த வித தொய்வின்றி விரைந்து எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
தற்போது அமைச்சரின் வாக்குறுதி என்ன ஆச்சு என மக்கள் கொந்தளித்துள்ளனர். ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறிப்போயுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற நிலை ஏற்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கின்றனர்.