மத்வராயபுரம் அருகே நொய்யல் ஆற்றில் மணல் திருடுவதை தடுக்க, வருவாய்த்துறையினர் பாதையில் பள்ளம் தோண்டியுள்ளனர்.
கோவை புறநகர் பகுதியான இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில், பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் மணல் திருடுவது தொடர்கதையாகி வந்தது.
ஊரடங்கு காரணமாக, கடந்த ஓராண்டாக ஆற்றில் மணல் அள்ளுவது தடைபட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் மத்வராயபுரம், கூடுதுறை அருகே நொய்யல் ஆற்றில், சிலர் வாகனங்கள் மூலம் இரவு நேரங்களில், மணல் கொள்ளையில் மீண்டும் ஈடுபட்டனர்.
இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில், வருவாய்துறையினர், நொய்யல் ஆற்றுக்கு செல்லும் பாதையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பாதையை துண்டித்தனர்.