- அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
- RTO அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை
- புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
- புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே இனி டிரைவிங் லைசென்ஸ் பெறலாம் என்றும், ஆடிஓ அலுவலகங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பயிற்சி மையங்கள் உயர்தர பயிற்சி வழங்குவதற்கான பிரத்யேக ஓட்டுநர் சோதனைத் தடங்களைக் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் தேவையான போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கற்றுத்தரப்பட வேண்டும்.
ஓட்டுனர் பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றவர்கள், ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது ஆர்.டி.ஓ அலுவலகம் வந்து வாகனங்களை ஓட்டிக்காட்டத் தேவையில்லை.
விதிமீறல் மற்றும் போதிய திறன் இன்றி ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறைகள் ஜூலை 1ந் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.