வங்கி மேலாளரின் மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை காட்டூர் பகுதியில் அரவிந்தன்- கீர்த்தனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அரவிந்தன் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும் இந்த தம்பதியினருக்கு திருமணமாகி குழந்தையில்லாத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் அரவிந்தன் வழக்கம்போல் வங்கி பணிக்கு சென்றுவிட்ட நிலையில் கீர்த்தனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது தனியார் கூரியர் ஊழியர் ஒருவர் அரவிந்தனுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்ய அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனவே கூரியர் ஊழியர் பார்சலை டெலிவரி செய்ய வெகு நேரமாக கதவை தட்டிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். இருப்பினும் கதவு திறக்க பட வில்லை.
இதுகுறித்து தகவலறிந்த அரவிந்தன் வீட்டிற்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கீர்த்தனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்துள்ளனர்.
இதனையடுத்து கீர்த்தனா தற்கொலை செய்து கொண்ட அறையை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு கடிதமொன்று சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில் “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும், எனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டேன்” என எழுதப்பட்டிருந்தது.
மேலும் என் அப்பா, அம்மா, அண்ணன் போன்றோர் என் மீது உள்ள பாசத்தில் காவல்துறையிடம் புகார் கொடுத்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம். இது நானாக விருப்பப்பட்டு எடுத்த முடிவு என் புகுந்த வீட்டில் யாரையும் டார்ச்சர் பண்ண கூடாது என்றும் எழுதி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் கீர்த்தனாவின் தந்தை சென்னிமலை காவல் நிலையத்தில் எனது மருமகன் அரவிந்தன் அடிக்கடி வரதட்சணை கேட்டு கீர்த்தனாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
எனது மகள் சாவுக்கு அரவிந்தன் தான் காரணம் எனவே காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த தகவலின் பேரில் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.