அரச மரத்தில் மாங்காய் காய்த்துத் தொங்குவது போல், வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சமூகத் தளங்களில் பெரும் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறது என்றாலும், அதனுடன் ஒரு செய்தியும் கூடவே உலா வருகிறது.
அதில், தெலுங்கு துறவி பிரம்மய்யங்கார் கலியுகத்தில் மக்களின் அநியாயம் தலைவிரித்தாடும் போது அரசமரத்தில் மாங்காய் காய்க்கும் எனறு பட்டயம் எழுதி வைத்துள்ளார். அவர் சொன்னது போல ரிஷிகேஷில் அரசமரத்தில் மாங்காய் காய்த்தள்ளது… மேலும் பசு தன் மடியில் தானே பால் உண்ணும் என்றும் எழுதி வைத்துள்ளார் அவர் கூறியது போல சென்னையில் ஒரு பசு தன் மடியில் தானே பால் உண்டது… இதன் முடிவில் கலியுகம் அழியும் எனறும் எழுதியுள்ளார்… – என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
கலிகாலத்தில் மக்கள் தவறுகள் அதிகரிக்கும் பொழுது அரசமரத்தில் மாங்காய் காய்க்கும் என்று துறவி கூறியிருப்ப தாகவும் இப்பொழுது காய்த்திருப்பதாகவும் குறிப்பிட்டு, அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ ரிஷிகேஷிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை ஒரு அதிசயம் என்று கருதி பலர் பகிர்கின்றனர்.
வைரல் வீடியோவின் பின்னுள்ள உண்மையை அறிய, சிலர் வீடியோவை கவனமாக பரிசீலித்து, வீடியோவில் உள்ள காட்சியில் கடைகளின் பின்னணியில், ஒரு யாத்திரைக் குழுவின் தொலைபேசி எண்ணைக் கண்டறிந்து, அதனை தொடர்பு கொண்டனர்.
அந்த யாத்திரைக் குழுவின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டதில், சிவசங்கர் யாத்திரை மேலாளர் மனீஷ் அகர்வால் போனில் சில தகவல்களைக் கூறியுள்ளார்.
அந்த வைரல் வீடியோவுடன் கூறப்படும் தகவல் போலியானது. அது ஒரு குறும்புத்தனமான வீடியோ. அந்த வீடியோவில் காணப்படும் அரச மரத்தில் மாங்காய் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வீடியோவில் காணப்பட்ட அரச மரம் எனது அலுவலகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது என்று மனிஷ் கூறியுள்ளார்.
ஆக… ஆக… ஆகவே இணையத்தில் எது வந்தாலும், குறிப்பாக வாட்ஸ் அப்பில் எது வந்தாலும், அதை அப்படியே அடுத்தவருக்கு பார்வர்ட் செய்து, அவர்களும் நம்மைப் போலவே எண்ணி ஆச்சரியப்பட்டு, அதிசயித்து அப்படியே புளகாங்கிதம் அடைவார்கள் என்று எண்ணி விடாதீர்கள்! ஒரு சிலர் இப்படியும் உண்மையை அறியும் நோக்கில் செயல்படுகிறார்கள். அப்புறம் இதைக் கூட அறிவு இல்லாம கூறுகெட்ட தனமா பார்வர்ட் பண்ணியிருக்கான் பாரு என்று உங்களை மட்டமாக எடைப் போடக் காரணம் ஆகிவிடும்! பாத்து… சூதனமா இருந்துக்கோங்க மக்கழேய்!
ऋषिकेश में त्रिवेणीघाट पुलिस चौकी के सामने,,पीपल के पेड़ पर आम लगे है,समझ से बाहर है,,? pic.twitter.com/NlrRfBMtD2
— sanjay suryavansi )) jai hind…. (@SanjayS17005055) June 2, 2021