ரூ. 1 கோடி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே சுரேஷ் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி வீணா. கனரக வாகனங்கள் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்த ராம மூர்த்திக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு கமலக்கண்ணன் என்பவரின் மூலம், திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷின் ராமமூர்த்தி – வீணா தம்பதிக்கு கிடைத்துள்ளது.
அப்போது நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் பெற்று தருவதாகவும், இதற்கு கமிஷனாக ஒரு கோடி தரவேண்டும் என கூறியுள்ளார்.
இதை நம்பிய ராமமூர்த்தி ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் ரூபாய் 93 லட்சமும், நேரடியாக ரூபாய் 7 லட்சம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.
மேலும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இருவரையும் அழைத்து சென்ற ஆர்.கே.சுரேஷ் அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அப்போது, நிரப்பப்படாத காசோலைகளிலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் இவர்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார்.
இதையடுத்து வங்கி வங்கி மேளாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகையை உங்கள் வங்கி கணக்கில் வரும் என கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளார்.
ஆனால் அவர்களின் வங்கி கணக்கிற்கு 10 கோடி ரூபாய் வரவில்லை. இது குறித்து ஆர்.கே.சுரேஷிடம் வீணாவும், ராமமூர்த்தியும் கேட்ட போது மிரட்டும் தொனியில் பேசியதுடன், பணம் தரமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமமூர்த்தி மன உளைச்சலில் உயிரிழந்துள்ளார். இதன்பின்னர், வீணா, தனக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்டு பலமுறை ஆர்.கே.சுரேஷ்-ஐ அணுகியுள்ளார்.
ஆனால் ஆர்.கே. சுரேஷ் உன்னையும் உனது மகளையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே. சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள வீணா, ஆர். கே.சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் எனவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.